பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு குறித்து பீட்டர் மெண்டல்சன் பிரபு (Lord Mandelson) அரசாங்கத்திடம் பலமுறை பொய் கூறியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு அவரை அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக நியமித்ததற்காக தாம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெண்டல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2009 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையிலிருந்து விடுதலையான அன்று, ஆபாச நடனக் கலைஞர்கள் (Strippers) குறித்து அவர்கள் உரையாடியது உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மெண்டல்சன் நியமனம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் மட்டும் நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெண்டல்சன் தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த எப்ஸ்டீனின் உதவியை நாடியது, அமெரிக்க அரசாங்கத்திடம் எப்ஸ்டீனுக்காக பரிந்துரை செய்யக் கோரியது போன்ற விபரங்கள் இந்த மின்னஞ்சல்களில் உள்ளன.
இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயத்திற்காக எப்ஸ்டீனுடன் பழகவில்லை என்றும் அவர் கருதுவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுபவர்கள், இத்தகைய உயர்மட்டத் தொடர்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

