மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் நீட்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்பில் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நஸீரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நஸீருக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (30) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது ‘டித்வா’ சூறாவளி பேரனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் மீட்சிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பல தசாப்தகாலமாக நிலவும் மிகநெருங்கிய ஒத்துழைப்பு என்பவற்றின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நீண்டகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதாக இருதரப்பினரும் உறுதியளித்தனர்.
இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையில் கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா, கலாசாரம், மக்கள் தொடர்பு மற்றும் பிராந்திய ஒற்றுமை உள்ளிட்ட விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களை அடுத்து, தற்போது நடைபெற்றுவரும் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

