Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்படவேண்டும் - ரவிகரன் வலியுறுத்து

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமாக சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்படவேண்டும் – ரவிகரன் வலியுறுத்து

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப் பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே, இம்முறை சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு இதன்போது ரவிகரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks