வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த கணவன் மனைவி தம்பதிகள் சீதுவ பிரதேசத்தில் இருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரைன்போ னெக்கஸ் என்ற பெயரில் பணியகத்தினால் அனுமதிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோசடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை மேற்கொண்டு சென்று, பெண் ஒருவரிடமிருந்து 40 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகளுக்கமைய, பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்வதற்காக ஒரு வருட காலத்துக்குள் பல தடவைகள் முயற்சித்தபோதும் குறித்த பெண், விசாரணை அதிகாரிகளிடமிருந்து மறைந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண். சீதுவ பிரதேசத்தில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய, பணியகத்தின் பொலிஸ் பிரிவு விசேட விசாரணை அதிகாரிகள் அவவை கைது செய்வதற்காக விசாரணை மேற்கொண்டதன் பிரகாரம் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவியாக இருந்த பெண்ணின் கணவனும் கைதுசெய்யப்பட்டதுடன் குறித்த இடத்தில் இருந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதான 200 ஒப்பந்தங்கள், மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், கதிர் இயக்க 300 அறிக்கைகள் மற்றும் அதிகளவிலான பிரசார பத்திரங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது சீதுவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடொன்றில் இந்த வியாபார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பெண் ஒருகோடி 80 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளமையும் வெளிப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று புதின்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

