எந்தவொரு அரசாங்கமும் அடக்குமுறையை கையில் எடுப்பதென்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். தற்போதைய அரசாங்கமும் தங்களது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே ஆட்சியாளர்களை குற்றப்புலனாய்வுக்கு அழைக்கிறது. மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறையில் புதன்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையை கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகிறது.
இதனால் அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த நல்லெண்ணம் குறைரைடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஊழல் மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்கு திரும்பியுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்தார்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாக தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்ததுபோல் செயற்படவில்லை.
அதனால் அரசாங்கத்தின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப்புலனாய்வுக்கு அழைத்து வருகிறார்கள். அரசாங்கத்திடம் தற்போது அடக்கு முறை மாத்திரமே எஞ்சி இருக்கிறது. அரசாங்கம் ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ள தீர்மானிப்பது என்பது அது அந்த அரசாங்கத்தின் பலவீனமாகும். இந்த அரசாங்கமும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கிறது.
அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் அவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

