Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்அரச நிறுவனங்களை சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

அரச நிறுவனங்களை சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சர்ட் ( CERT) நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல. அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், தகவல் உட்கட்டமைப்புகளைச் செயற்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும், சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக அரசின் முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை வழங்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏனைய அரச நிறுவனங்களையும் சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக முன்னணி அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதுடன், அந்த நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியமும், அதற்கான பயிற்சித் திட்டங்களை முறையாகச் செயற்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில், சைபர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் திறன் என்பது அரச நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் ஒரு அடிப்படை அங்கமாகக் கருதப்பட வேண்டும் எனவும் அரச இணையதளங்களை ஊடுருவுதல், ரென்சம்வேர் (Ransomware) தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சைபர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகள் முடங்குவதைத் தடுக்கவும், அவற்றை நிர்வகிக்கவும் இந்த புதிய பொறிமுறை வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் ஊடாக அரச நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அச்சுறுத்தல்களைக் கண்காணித்தல், முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் முறையான ஒருங்கிணைப்புடன் கூடிய பதில் வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதிகள் கிடைக்கின்றன. எனவே, இது வெறும் ஒரு நடைமுறைச் செயல்பாடு மட்டுமல்ல, நிறுவன ரீதியான நம்பகத்தன்மைக்காகச் செய்யப்படும் முதலீடு எனவும் இதன்போது அடையாளப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால, இலங்கை CERT நிறுவனத்தின் தலைவர் திலக் பத்திரகே, பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேன, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகள் செயற்படுத்தப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ள 37 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks