Saturday, February 21, 2026
Homeஅரசியல் கட்டுரைசிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்கும் தமிழர்கள்: மா.சத்திவேல்

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக கைக்கோர்க்கும் தமிழர்கள்: மா.சத்திவேல்

தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு. அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (01.02.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாட்டின் 78வது சுதந்திர தினத்தை தமது பதவிக்காலத்தில் இரண்டாவது சுதந்திர தினத்தையும் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இந்த தினத்தினை தமிழர்கள் என்றோ கரி நாளாக அடையாளப்படுத்தியதோடு அரசியல் வாழ்வுரிமைக்கான போராட்ட நாளாகவும் மாற்றி உள்ளனர்.

இந்த நிலை தெற்கு மக்களுக்கும் தோன்றும் நிலை தேசிய மக்கள் சக்தியின் காலத்தில் அண்மித்து விட்டது என்றே கூறலாம்.

அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் சட்டமானால் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் அதே மனநிலையுடனான போரியல் வெற்றியும் போலியானது என்பதையும் மக்கள் உணர்வதோடு அன்றைய நாள் இதுவரைக்கும் அவர்களின் அரசியல் தலைமைகள் கூறிவந்த தேசியத்தையும் இறைமையையும் கரி படிந்துள்ளது என்று அவர்களுக்கு புரியும்

நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் காக்கும் காவல் தெய்வமாக சிங்கள பௌத்த பேரினவாத்தை கருதி அதனையே தெற்கின் தலைவர்கள் என்று அரசியலாக்கினார்களோ அன்றே அது மரண பொறிக்குள் தள்ளப்பட்டது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெளிபாடு
இதனையும் மீட்பதற்கான அரசியல் போராட்டமாகவே தமிழர்களின் அரசியல் போராட்டம் எழிச்சி கொண்டது. ஆனால் பேரினவாத அரசியல் தலைமைகள் அதனை பயங்கரவாதமாக்கி சர்வதேச சக்திகளின் துணையோடு இனப்படுகொலையை அரங்கேற்றி தேசிய தலைவரையும் கொன்ற நாளிலே அது மீட்க முடியாத அளவில் அந்நிய சக்திகளின் பிடிக்குள் சிக்கியது.

அதனை தாரை வார்ப்பதன் அடையாளமாகவே 2009 மே 19ல் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி பூமியை வீழ்ந்து வணங்கி உத்தியோக பூர்வமாக நாட்டை கையளித்தார்.

இதனையே யுத்த வெற்றி நாளாக சிங்கள தேசம் கொண்டாடி வருகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் கண்களை மறைத்து விட்டது.

உணர்வு காலம் வெகு விரைவில் நடக்கும். 2022 காலி முகத்திடல் போராட்டம் ஓரளவுக்கு மக்களின் கண்களை திறந்தாலும் அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் மக்கள் கண் திறப்பர். சுதந்திரம் என்பது வெறும் களியாட்டம் என்பதை அவர்கள் அறிவர்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான கோரிக்கை
நடைமுறையாக்க உத்தேசித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் எவரையும் இந்த சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதியாக்க முடியும்.கைது செய்ய முடியும் அதிகாரம் ராணுவத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்வொரு பிரதேசத்தையும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் முடியும். அது மட்டுமல்ல மக்களின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சரித்திரம் முற்றாக பறிக்கப்படும் அபாயமும் உள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் கூட இலங்கையை விமர்சிக்கவோ எழுதவோ முடியாது.அவ்வாறு செய்வோரை பயங்கரவாதியாக்க முடியும்.

முக்கியமாக தமிழர்களின் அரசியலையும் அதனை நோக்கிய அரசியல் போராட்டத்தையும் அது தொடர்பான கலந்துரையாடலை மட்டுமல்ல இனப்படுகொலை நினைவு நாட்கள் நினைவேந்த நாட்களைக் கூட பயங்கரவாதமாக முடியும்.

நாட்டின் அரசியல் அமைப்பின் மூலம் வழங்கி உள்ள ஜனநாயக உரிமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் பறிப்பதற்கான சட்டத்தை அமுலாக்குவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டு தேசிய மக்கள் சக்தி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது யாருக்காக?

அவர்களின் நியாயக் கோட்பாடு தான் என்ன? அரசு பயங்கரவாதத்தில் துணைக் கொண்டு தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்க மக்கள் விடுதலை முன்னணி தேவையான பாதுகாப்பினை வலை அமைத்துக் கொள்ளவே புதிய சட்டத்தை உருவாக்க முனைகின்றது.

அத்தோடு உலக வல்லரசுகளின் அரசியல் பொருளாதார சதிவலைகுள்ளும் சிக்கி உள்ளது. அதனை மறைப்பதற்கு மக்கள் எழுச்சியை தடுப்பதற்கு எடுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. வடக்கு கிழக்கின் அரசியல் போராட்டத்தை தெற்கின் சமூகம் ஏற்று விழிப்புணர்வடைந்து தமிழர்களின் அரசியல் போராட்டத்தோடு தெற்கு கைகோர்த்தால் மட்டுமே சுதந்திரத்திற்கான மீட்பு உண்டு.

அதுவரைக்கும் முழு நாட்டுக்கும் சுதந்திர தினம் என்பது கரிநாளே. தமிழர்களின் கரிநாள் போராட்டம் தெற்கிற்கு விழிப்பாகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks