தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் (USS Higgins) மற்றும் சீனப் போர்க்கப்பல்கள் இடையே கடந்த புதன்கிழமை ஒரு பயங்கரமான மோதல் அரங்கேறியுள்ளது.
சீன ராணுவத்தின் தெற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் போர்க்கப்பல், சீன அரசின் அனுமதியின்றி ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) பகுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து சீனக் கடற்படை அந்தப் போர்க்கப்பலைக் கண்காணித்து, அங்கிருந்து விரட்டியடித்தது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவின் இறையாண்மையைக் கடுமையாக மீறுவதாகவும், பிராந்திய அமைதியைக் குலைப்பதாகவும் சீனா சாடியுள்ளது.
சீனாவின் இந்தக் கூற்றை அமெரிக்கக் கடற்படையின் 7-வது படைப்பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டே அந்தப் பகுதியில் பயணம் செய்தது.
‘கடற்பயண சுதந்திரத்தை’ (Freedom of Navigation) நிலைநாட்டவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் தவறான அறிக்கைகள் எங்களின் கடமையைத் தடுக்காது” என்று அமெரிக்கா பதிலளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகைத் துரத்திச் சென்றபோது, சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று அதன் சொந்தக் கடலோரக் காவல் படை கப்பல் மீதே மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல்கள் குறித்து அவுஸ்திரேலியத் தூதரகம் கவலை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் சர்வதேசச் சட்டங்களை மதித்து, பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஸ்கார்பரோ ஷோல் பகுதி வழியாக ஆண்டுதோறும் சுமார் 3 ட்ரில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுவதால், இந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா தொடர்ந்து முயன்று வருகிறது.
அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு அப்பகுதியில் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

