Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் : அகழ்வுப் பணிகள் மார்ச்சில்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் : அகழ்வுப் பணிகள் மார்ச்சில்

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றையதினம்(09.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றையதினம் திங்கட்கிழமை நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றையதினம் சென்று பார்வையிட்டனர்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks