Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல்!நெற்கொள்வனவு தாமதம் குறித்து ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல்!நெற்கொள்வனவு தாமதம் குறித்து ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நெல் சந்தைப்படுத்தல்சபை விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.அந்தவகையில் கடந்த 20.01.2026 பாராளுமன்றில் நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து கடந்த 21.01.2026அன்று இடம்பெற்ற விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இதுதொடர்பில் பேசியபோது அமைச்சர் லால்காந்த மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகளால் கடந்த 26.01.2026அன்று நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து 27.01.2026அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் நெற்கொள்வனவு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதன்போது மறுநாள் 28ஆம் திகதியிலிருந்து நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென முல்வைத்தீவு மாவட்டசெயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை நெற்கொள்வனவை ஆரம்பிக்கவில்லை.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினுடைய நெற் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கைக்காலத்தில் கொள்வனவுசெய்த நெல் உரியவகையில் அகற்றப்படாமல் இருப்பில் இருப்பதாக அறியமுடிகின்றது. இதனாலேயே நெற்கொள்வனவிற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் அறிகின்றோம்.

அந்தவகையில் தண்ணீரூற்று நெற் களஞ்சிய சாலையில் 10மெற்றிக்தொன் நெல் இருப்பில் காணப்படுவதுடன், புதுக்குடியிருப்பில் 15மெற்றிக்தொன், உடையார்கட்டு 25மெற்றிக்தொன், முள்ளியவளை 100மெற்றிக்தொன், கோம்பாவில் 20மெற்றிக்தொன், வித்தியாபுரத்தில் 130மெற்றிக்தொன் என முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப் படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் மொத் 304மெற்றிக்தொன் நெல் களஞ்சியசாலைகளின் இருப்பில் தேங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏற்கனவே 2025ஆம் ஆண்டு சிறுபோகக் காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டநெல் களஞ்சியங்களில் தேங்கியிருப்பதற்கான காரணம் என்ன?

இவ்வாறு களஞ்சியசாலையில் தேக்கநிலையில் உள்ள நெல்லினை உரியகாலத்தில் வெளியேற்றி களஞ்சியசாலையை நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு நெல் சந்தைப்படுத்தல்சபை தயார்நிலையில் வைத்திருந்திருக்கவேண்டும்.

ஆனால் நெல்சந்தைப்படுத்தல் சபையினர் அசமந்தப்போக்குடன் இருந்ததினாலேயே தற்போது களஞ்சியசாலைகள் இடமின்றி நிறைந்திருக்கின்றன.

எனவே தற்போது நெற்கொள்வனவிற்கென அரசால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுதனதல் சபையின் அசமந்தப்போக்கால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவுசெய்வதற்கு களஞ்சியசாலைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகளினால் உறுதியுரைக்கப்பட்டதைப்போன்று விவசாயிகளிடமிருந்து இன்னும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக குமுழமுனைப்பகுதியில் மாத்திரம் நெல்சந்தைப்படுத்தல் சபையினர் நெல்தரங்களைப் பார்வையிட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து நெற்கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.

இவ்வாறாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் தற்போது விவசாயிகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஏற்கனவே டித்வா புயல் வெள்ள அனர்த்தங்களினாலும், தொடந்து நிலவும் வானிலையாலும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு, நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்விலும் காலதாமதம் ஏற்படுவது மேலும் அவர்களை பாதிப்பிற்குள்ளாக்குவதாக அமைகின்றது.

எனவே நெல் சந்தைப்படுத்தல் சபையினர் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்படாமல் விரைந்து விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்ள ஆரம்பிக்கவேண்டும்.

அவ்வாறு விரைவாக நெற்கொள்வனவை மேற்கொள்ளத் தவறினால் விவசாயிகளுடன் இணைந்து நெல்சந்தைப்படுத்தல் சபைக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் – என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks