Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது - மனோ கணேஷன்

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது – மனோ கணேஷன்

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும். தேசிய மக்கள் சக்தி முன்னர் கூறிய பொய்களை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையின்றி பொய்களைக் கூறினர். தற்போது அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

நிலக்கரி ஊழல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது. தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் இனிவரும் நாட்களில் மின்சார உற்பத்தி குறைவடையும். எனவே மேலதிக மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக நிலக்கரியை கொள்வனவு செய்ய வேண்டியேற்படும். இதனால் செலவும் அதிகரிக்கும்.

தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்த விநியோக நிறுவனம், முன்னர் அரிசி இறக்குமதி செய்து அப்போது ஏற்பட்ட மோசடிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவ்வாறு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் நிலக்கரி விநியோகத்துக்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. இந்த மோசடியால் அரசாங்கத்துக்கு 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்கள் இல்லை என மறுக்கின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முகத்தில் இந்த நிலக்கரி மோசடி கரியைப் பூசியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஊழல் செய்ததாகவும், தாம் அவ்வாறு இல்லை என்றும் இவர்கள் கூறினர். ஆனால் இன்று அவர்கள் செய்ததையே இவர்களும் செய்துள்ளனர். விரைவில் மீண்டும் எமது ஆட்சி மலரும்.

மக்களுக்கு முறையான ஆட்சி வேண்டுமே தவிர, கண்காட்சியல்ல. தாம் இடதுசாரிகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் ஜே.வி.பி.யின் வரலாற்றை அறியாதவர்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையினாலேயே றோஹண விஜேவீர ஜே.வி.பி.யை ஸ்தாபித்தார். ஆனால் இன்று வேறு வழியின்றி இவர்கள் இந்தியாவின் கால்களில் சரணடைந்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் எந்த ஆட்சி வந்தாலும் மலையக மக்களின் வாழ்க்கை நிலைமை துன்பம் மிகுந்ததாகவே இருக்கும். 2015 – 2019 மாத்திரமே அந்த மக்களுக்கு பொற்காலமாகும். எனவே தேயிலை மலைகளுக்குள் சென்று தொழிலாளர்களின் கைகளை பார்ப்பதை விட, மலையக மக்களுக்கு வீட்டு மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

அவர்களை தொழிலாளர்களாக அன்றி பங்காளிகளாக்க வேண்டும். நாம் இது தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். எமது ஆட்சியில் அதனை நிறைவேற்றுவோம் என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks