அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தப் பயணம், ஒரு கப்பலை தாயகத்துக்கு கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை மேற்கொள்ளும் அதிக நீளமான கடல் பயணம் என்பதுடன், பனாமா கால்வாயை முதன்முறையாக கடக்கும் இலங்கை கடற்படை கப்பல் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்கிறது.
இலங்கை கடற்படையில் சேவையில் இணைந்த பின்னர், “DECISIVE” என்ற கப்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் தேடுதல் மற்றும் மீட்பு (Search & Rescue) நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைகளை பாதுகாக்கவும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கையில், “ இந்த கப்பல் மாற்றம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பகிரப்பட்ட பொறுப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைகிறது. அமெரிக்காவின் Excess Defense Articles (EDA) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்களை இயக்குவதில், தற்போது உலகிலேயே முன்னணியில் இருப்பது இலங்கையாகும்.
இத்துடன், இலங்கை கடற்படையில் தற்போது நான்கு முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்கள் சேவையில் உள்ளன. இது அமெரிக்கா – இலங்கை இடையேயான ஆழமான நம்பிக்கை, இணக்கத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் கடற்படை கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.
இதேவேளை, கப்பலை இலங்கைக்கு கொண்டு வரத் தயாரான இலங்கை கடற்படை பணியாளர்களுடன் அமெரிக்காவில் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறோம் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. “DECISIVE” என்ற கப்பலை பொறுப்பேற்றுக் கொள்ளும் இலங்கை கடற்படை குழுவிற்கு சிறப்பான கடற்பயணம் அமைய வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல் இணைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

