Tuesday, April 14, 2026
Homeபிரதான செய்திகள்மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு

மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், தனது மருமகனால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரது சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளி பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாக வாக்குமூலம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks