Thursday, September 17, 2026
Homeபிரதான செய்திகள்மின்சார சபை மறுசீரமைப்பின் போது ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

மின்சார சபை மறுசீரமைப்பின் போது ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயல்முறையின் போது ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று(12.3.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கமாகும்.

புதிய நிறுவனங்களின் உரிமையை அரசின் கீழேயே பேணுவதன் மூலம் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மின்சார சபை ஊழியர்களுக்குரிய உரிமைகள் எவ்வித பாதிப்புமின்றி புதிய நிறுவனக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும்.

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் ஆராயப்பட்டது.

ஊழியர்கள் மன நிம்மதியுடன் பணியாற்றுவதற்கான சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மறுசீரமைப்பு என்பது ஒரு இலகுவான காரியம் அல்ல. அது திட்டமிடப்பட்ட நீண்டகாலச் செயல்முறை.

இக்காலப்பகுதியில் ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே சிறந்த புரிதல் இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே மின்சக்தித் துறையின் எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்ள முடியும்” என்று ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த மாற்றத்தின் அவசியத்தைத் தாங்களும் அங்கீகரிப்பதாகத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசின் நோக்கங்களை அடைவதற்குப் புரிந்துணர்வுடன் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இந்தச் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks