இங்கிலாந்து அரசு, அமெரிக்க படைகளுக்கு தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்தி ஈரான் இலக்குகளைத் தாக்க அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை பகுதியை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, அமெரிக்கா படைகளுக்கு பிரிட்டிஷ் தளங்களை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் தற்போது, “கூட்டு சுயபாதுகாப்பு” (Collective Self-Defence) அடிப்படையில் தாக்குதல் இலக்குகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து இந்த முடிவை எடுக்க தாமதித்ததாக விமர்சித்துள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்த நடவடிக்கை பிரிட்டிஷ் மக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இங்கிலாந்து நேரடியாக தாக்குதல்களில் ஈடுபடாது என்றும், தனது நிலைப்பாட்டில் அடிப்படை மாற்றமில்லை என்றும் டவுனிங் ஸ்ட்ரீட் விளக்கம் அளித்துள்ளது. இந்த முடிவுக்கு இங்கிலாந்தின் அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலக எண்ணெய் விநியோகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது. தற்போது ஈரான் தாக்குதல் அச்சுறுத்தலால் இந்த கடற்பாதை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
போருக்கு முன்பு தினசரி சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணையை கடந்து சென்ற நிலையில், மார்ச் மாதத்திலிருந்து இது 100 கப்பல்களுக்கு குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அப்பாஸ் அராக்சி, பிரிட்டன் எடுத்துள்ள இந்த முடிவு “தாக்குதலில் பங்கேற்பதாக” கருதப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் தன்னுடைய சுயபாதுகாப்பு உரிமையைப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், யுவெட் கூப்பர், ஈரானின் தாக்குதல்களை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் எண்ணெய் வசதிகளை குறிவைக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அரசு, நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க அவசர தணிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனக் குறிப்பிட்டு, விரைவான அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த முடிவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

